கேரளாவில் முதன்முறையாக நடமாடும் பரிசோதனை மையம் - ஆசிரியர் மலர்

Latest

06/04/2020

கேரளாவில் முதன்முறையாக நடமாடும் பரிசோதனை மையம்


கொச்சி: கேரளாவில் கரோனா பரிசோதனை செய்யும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நவீன பாதுகாப்பு அறையை எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் நிர்மாணித்துள்ளது.
கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களுக்கு போதுமான அளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க திணறி வரும் நிலையில், பொதுமக்களுக்கு அதிக அளவில் பரிசோதனை செய்ய வசதியாக இந்த நடமாடும் பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த கலாம்சேரி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த  மருத்துவர் கணேஷ் மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த பரிசோதனைக் கூடத்தை வடிவமைத்துள்ளனர்.
இதுபோன்றதொரு கட்டமைப்புதான் தென் கொரியாவில் அதிகளவில் மருத்துவப் பரிசோதனை நடத்த பயன்படுத்தப்படுகிறது என்றும், இதன் மூலம் வெறும் 2 நிமிடத்தில் ஒருவருக்கு ரத்த மற்றும் சளி மாதிரிகளை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு அறை மூலம், பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் நேரடியாக எந்த தொடர்பும் ஏற்படாது. இந்த பாதுகாப்பு அறையை அமைக்க ரூ.40 ஆயிரம் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நான்கு பக்கமும் மூடப்பட்டு, ஒரு பக்கம் கண்ணாடி சுவரைக் கொடு இருக்கும். அதன் வெளிப்புறத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருக்கும், கண்ணாடி சுவரில் இரண்டு கையுறைகளும் பொருத்தப்பட்டிருக்கும். அதன் வழியாக மருத்துவப் பணியாளர் ரத்த மற்றும் சளி மாதிரிகளை எடுக்கலாம்.
ஒவ்வொரு முறை பரிசோதனை நடத்தப்பட்டதும், கையுறைகளும், கேபினும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படும். தற்போதைக்கு இரண்டு மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளது.  தேவைப்படின் குறுகிய காலத்தில் மேலும் பல பாதுகாப்பு அறைகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459