பிளாஸ்மா சிகிச்சை முடிவுகள் நம்பிக்கை - டில்லி முதல்வர் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

24/04/2020

பிளாஸ்மா சிகிச்சை முடிவுகள் நம்பிக்கை - டில்லி முதல்வர் அறிவிப்பு


புதுடில்லி: கொரோனா நோயாளிகளுக்கு முதற்கட்டமாக அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனை முயற்சியாக கேரளாவை தொடர்ந்து டில்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் பிளாஸ்மா சிகிச்சை முறையை கையில் எடுத்துள்ளன. பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது
. இந்நிலையில் பிளாஸ்மா சிகிச்சை முறை குறித்து டில்லியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:
டில்லி லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக டாக்டர்கள் பரிசோதனை முயற்சியாக 4 கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளித்தனர். தற்போது வரை முடிவுகள் திருப்திகரமாக உள்ளது. கடுமையான நோய்வாய்ப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களில் சிகிச்சையளிக்க பிளாஸ்மா செறிவூட்டல் நுட்பத்தின் மருத்துவ பரிசோதனையை டாக்டர்கள் மேற்கொள்வார்கள்.
சோதனை வெற்றிகரமாக இருந்தால், தீவிரமான கொரோனா நோயாளிகளின் உயிரை நாங்கள் காப்பாற்ற முடியும் இவ்வாறு அவர் கூறினார்.
பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள்
‛4 நோயாளிகளுக்கு நேர்மறையான முடிவுகள் வந்திருப்பதில் மகிழ்ச்சி. தற்போது 2 அல்லது 3 நோயாளிகளுக்கு ரத்தம் மற்றும் பிளாஸ்மா தயாராக உள்ளது.
இன்று அவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும். அதேநேரத்தில், கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் தேசபக்தியைக் காட்டவும், ரத்த பிளாஸ்மாவை தானம் செய்யவும் முன்வர வேண்டுமென,’ கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் இன்ஸ்டியூட் இயக்குனர் எஸ்.கே.சரின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459