கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சமூக தொற்றை தடுப்பதற்காக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1000ஐ கடந்துவிட்டது.
மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்துவரும்போதிலும், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பில் இரட்டை சதத்தை நெருங்கிவிட்ட நிலையில், கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை 176ஆக உள்ளது.
கர்நாடகாவில் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு 50ஐ எட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42ஆக இருந்த நிலையில், ஈரோட்டில் 10 மாத குழந்தை உட்பட மொத்தம் 8 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதி செய்துள்ளார். எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 50ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேரில் நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.